Sunday, May 19, 2024
Home » தூத்துக்குடி மாநகரின் தந்தை ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் சிலையை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

தூத்துக்குடி மாநகரின் தந்தை ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் சிலையை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

by Kalaivani Saravanan

சென்னை: தூத்துக்குடி மாநகரின் தந்தை ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸுக்கு ரூ.77.87 இலட்சம் மதிப்பீட்டில் குவிமாடத்துடன் கூடிய திருவுருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் தூத்துக்குடியில் நவம்பர் 15ம் தேதி பிறந்தார். அறிவுத் திறமையும், அறிவுக் கூர்மையும் கொண்டவர். உழைப்பால் உயர்ந்தவர். ஈடுபடும் செயலில் இடர்களும் தடைகளும் தொடர்ந்தாலும், அச்செயல் பலருக்கு பயன்படும் எனில், அதனை செய்து முடித்து வெற்றி காணும் மன உறுதி கொண்டவர் அவர்.

தூத்துக்குடி நகராட்சி தலைவராக 1909 டிசம்பர் 21ல் பொறுப்பேற்ற ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ், மக்களின் பேராதரவுடன் ஐந்து முறை தொடர்ந்து நகராட்சி மன்றத் தலைவராக விளங்கியுள்ளார். கடற்கரை நகரமான தூத்துக்குடி நீண்ட நெடுங்காலமாகவே குடிநீர் பிரச்சினையால் சிரமப்பட்டு வந்துள்ளது. 1927ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன், நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி, மக்களின் பாராட்டினை பெற்றார்.

இந்தக் குடிநீர்ப் பிரச்சினைகள் தீர்ந்தது மட்டுமல்லாமல் நகரின் பல வளர்ச்சிப் பணிகளையும் நிறைவேற்றியதனால் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் “தூத்துக்குடி மக்களின் தந்தை” என போற்றப்படுகிறார். இத்தகைய மாமனிதர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களைப் போற்றும் வகையில் அவருக்கு தூத்துக்குடி மாநகராட்சியில் குவிமாடத்துடன் கூடிய முழு உருவச் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசால் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி உரிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் 77.87 லட்சம் ரூபாய் செலவில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களுக்கு குவிமாடத்துடன் கூடிய திருவுருவச் சிலையினை நாளை (நவ.14) அன்று காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தமைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.

You may also like

Leave a Comment

6 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi