Sunday, September 1, 2024
Home » தமிழ்நாட்டில் தொழில் துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவியும் செய்ய அரசு காத்திருக்கிறது: ஸ்பெயின் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழ்நாட்டில் தொழில் துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவியும் செய்ய அரசு காத்திருக்கிறது: ஸ்பெயின் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

by Dhanush Kumar

சென்னை: தமிழ்நாட்டில் தொழில் துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருப்பதாக ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (29ம் தேதி) ஸ்பெயின் நாட்டு தலைநகர் மாட்ரிட் நகரில் நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது, தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டு சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து அவர் பேசியதாவது:

ஸ்பெயின் நாட்டின் தலைநகரான ‘மாட்ரிட்’ நகருக்கு நான் வருகை தருவது இதுவே முதல் முறை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இருக்கும் தமிழ்நாடு என்ற மிகமுக்கியமான மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக நான் இருக்கிறேன். எங்களது கட்சி 75 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆறு முறை அந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது. திருவள்ளுவரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் தமிழ் மொழியில்தான் திருக்குறளை எழுதினார். அவரது திருக்குறள் உலகின் 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அத்தகைய பெருமையும் பாரம்பரியமும் கொண்ட மாநிலத்தில் இருந்து நான் வந்துள்ளேன். கால்பந்து விளையாட்டில் புகழ் பெற்ற நாடு ஸ்பெயின். ஸ்பெயினை நான் இன்னும் சுற்றிப் பார்க்கவில்லை. நான் பார்த்த வரையில் கலைகளின் நாடாக காட்சியளிக்கிறது. உங்களது கலை உணர்வு ஒவ்வொரு கட்டிடத்திலும், தெருக்களிலும், ஒவ்வொரு மூலையிலும் உள்ளது. அழகான நிலப்பரப்பும், துடிப்பான கலாச்சாரமும் இணையப் பெற்று, மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடாக ஸ்பெயின் நாடு விளங்குகிறது. பழம்பெரும் வரலாறும் பாரம்பரியமும் பெற்ற இந்த நாடு போன்றே, வரலாற்று பெருமை கொண்ட தமிழ்நாட்டின் சார்பாக இங்கு வந்து உங்களை சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

உலகிலேயே அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியாகவும், 20 நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழியாகவும் விளங்கும் ஸ்பானிஷ் மொழி போலவே எங்களது தமிழ்மொழியும் பாரம்பரியம் மிக்கது. கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள மொழி எங்கள் தமிழ் மொழி. ஸ்பெயினுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரு மிகப்பெரும் ஒற்றுமை இருக்கிறது. காளை அடக்குதல் விளையாட்டு, ஸ்பெயினின் தேசிய விளையாட்டாகவும் பாரம்பரிய விளையாட்டாகவும் விளங்குகிறது. எங்கள் தமிழ்நாட்டிலும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு எமது கலாச்சாரத்தின் சின்னமாக, உலகப்புகழ் பெற்று விளங்குகிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காகவே தனியாக ஒரு ஸ்டேடியம் கட்டி இருக்கிறோம். வருங்காலத்தில் தமிழ்நாட்டுக்கு நீங்கள் வரும்போது அதனை பார்க்கலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்திலேயே, 4வது பெரிய பொருளாதார நாடாக ஸ்பெயின் விளங்குகிறது. எட்டு ‘பார்ச்சூன் 500’ நிறுவனங்கள் மற்றும் 20 ‘பார்ச்சூன் 2000’ நிறுவனங்களும், ஸ்பெயின் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றன. தமிழ்நாட்டுடன் வணிக உறவு மேற்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளில், 6வது பெரிய நாடாக ஸ்பெயின் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில், 4வது பெரிய பொருளாதாரமாக ஸ்பெயின் திகழ்வது போல, இந்தியாவின் 2வது பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்த இரண்டு பொருளாதாரங்களுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. கெஸ்டாம்ப், கமேசா, ரோக்கா, உர்பேசர், இன்கிடீம், ஆம்ப்போ, பபேசா, ஆர்பினாக்ஸ், கோர்லான் ஆகிய முக்கிய ஸ்பானிஷ் நிறுவனங்கள் எங்கள் நாட்டில் தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்த பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்திடும் விதமாக, உங்களுடைய முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.

இதற்கு முன்பு ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளேன். தொடர்ச்சியாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் செல்ல இருக்கிறேன். கடந்த ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் நாங்கள் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்து இருந்தன. மேற்கு ஆஸ்திரேலியா, தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்கள். 30 நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எங்கள் மாநாட்டுக்கு வந்திருந்தார்கள். மிகப் பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா போன்ற நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன. 130க்கும் மேற்பட்ட ‘பார்ச்சூன் 500’ நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தமது திட்டங்களை நிறுவியுள்ளதே தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்துள்ளதற்கு சான்று. இதன் தொடர்ச்சியாக ஸ்பெயின் நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வாகனங்கள், குறிப்பாக மின்வாகனங்கள், மின்னணு கருவிகள், தோல் பொருள்கள், தோல் அல்லாத காலணிகள், ஆடைகள் போன்றவற்றின் உற்பத்தியிலும், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர் மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகின்றது. இந்த துறைகளிலும், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, உயிர் அறிவியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம், மருந்துகள், உணவு பதப்படுத்துதல், உப்புநீக்கம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆகிய துறைகளில் உங்களின் மேலான முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஸ்பெயின் முதலீட்டாளர்களை கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் தொழில்களை துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது. பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும் திறன்மிக்க மனிதவளத்தையும் உறுதி செய்வதோடு, பல்வேறு தொழில் கொள்கைளின் கீழ் உயர் சலுகைகளையும் அளிக்க உள்ளோம். எனவே தங்களது முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று மீண்டும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஸ்பெயின் நாட்டிற்கான இந்திய தூதர் தினேஷ் பட்நாயக், ஸ்பெயின் நாட்டின் பொருளாதார வர்த்தக துறை தலைமை இயக்குநர், ஸ்பெயின் வர்த்தக சபையின் சர்வதேச இயக்குநர், ஸ்பெயின்-இந்தியா கூட்டமைப்பின் தலைவர், Guidance தமிழ்நாடு மேலாண்மை இயக்குநர், ஸ்பெயின் நாட்டின் முக்கிய நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

* தமிழ்நாட்டுடன் வணிக உறவு மேற்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளில், 6வது பெரிய நாடாக ஸ்பெயின் உள்ளது.

* ஐரோப்பிய ஒன்றியத்தில், 4வது பெரிய பொருளாதாரமாக ஸ்பெயின் திகழ்வது போல, இந்தியாவின் 2வது பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்குகிறது.

* இந்த இரண்டு பொருளாதாரங்களுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன.

You may also like

Leave a Comment

8 + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi