செங்கல்பட்டு: செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி முன் தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து வகை ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் 10 அம்ச முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஓட்டுநர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் ‘ஹிட் அண்ட் ரன்’ புதிய சட்ட திருத்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்றி அரசு இதழில் வெளியிட வேண்டும். ஓட்டுனர்களுக்கு இயற்கை மரணம் ஏற்பட்டால் ரூ.3 லட்சம், விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.5 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட வேண்டும்.
அனைத்து சுங்கச்சாவடிகளிலும் மருத்துவமனை, கழிப்பறை வசதி, சுகாதாரம் போன்றவற்றை அமைத்து தர வேண்டும் என உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பிற்காக இருந்த போலீசார் உடனடியாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.