சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நாவல் பழம் சீசன் தொடங்கி விடுகிறது. நாவல் பழத்தில் அதிகமான அளவு கால்சியம் உள்ளது. அதேபோல, உடலுக்கு தேவையான வைட்டமின் பி1, பி2, பி5 ஆகிய சத்துகள் அதிகம் கிடைக்கின்றன. இப்போது தெருவோர கடைகளில் வியாபாரம் தற்போது சூடுபிடித்து வருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்தும் அதிகளவில் நாவல் பழங்கள் தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. அதேபோல, ஆந்திர மாநிலத்தில் ஜம்பு எனப்படும் கலப்பு வகையான நாவல் பழங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை கிருஷ்ணகிரி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நாட்டு நாவல் பழங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் நாவல் பழங்கள் இன்னும் அறுவடைக்கு வராத நிலையில் வரத்து குறைவு காரணமாக கலப்பு வகை நாவல் பழங்கள் வெளி மாநிலங்களில் இறக்குமதி செய்யப்பட்டு அவை கிலோவிற்கு350 முதல் ரூ.400 வரை விற்கப்பட்டு வருகிறது.