ஹாமில்டன்: தென் ஆப்ரிக்க அணியுடன் நடந்த 2வது டெஸ்டில், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. செடான் பார்க் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 242 ரன், நியூசிலாந்து 211 ரன் எடுத்து ஆல் அவுட்டாகின. 31 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய தென் ஆப்ரிக்கா 235 ரன்னுக்கு சுருண்டது. இதைத் தொடர்ந்து, 267 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 3ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 40 ரன் எடுத்திருந்தது.
டாம் லாதம் (21 ரன்) – கேன் வில்லியம்சன் இணைந்து நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். லாதம் 30 ரன்னில் வெளியேற, ரச்சின் ரவிந்த்ரா 20 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். வில்லியம்சன் – வில் யங் ஜோடி 4வது விக்கெட்டுக்கு உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த, நியூசிலாந்து 94.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 269 ரன் எடுத்து வென்றது. வில்லியம்சன் 133 ரன் (260 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்), வில் யங் 60 ரன்னுடன் (134 பந்து, 8 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்ரிக்க தரப்பில் டேன் பியட் 3 விக்கெட் வீழ்த்தினார். நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. 2வது டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட் கைப்பற்றிய நியூசி. அறிமுக வேகம் வில்லியம் பீட்டர் ஓரூர்கி (22 வயது) ஆட்ட நாயகன் விருது பெற்றார். 4 இன்னிங்சில் 118, 109, 43, 133* என மொத்தம் 403 ரன் குவித்த வில்லியம்சன் தொடர் நாயகன் விருது பெற்றார்.