ஊட்டி: ஊட்டி தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல இன்று முதல் 22ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி – கோத்தகிரி சாலையில் சுமார் 8 கி.மீ. தொலைவில் தொட்டபெட்டா சிகரம் அமைந்துள்ளது. தமிழகத்தின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான தொட்டபெட்டாவை காண சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்வது வழக்கம். இங்குள்ள, தொலைநோக்கி மூலம் ஊட்டி நகரையும், அவலாஞ்சி, வேலிவியூ பள்ளத்தாக்கு, குன்னூர் மற்றும் இயற்கை காட்சிகளையும் பார்த்து ரசிப்பது வழக்கம். ஊட்டி வரும் சுற்றுலா பயனிகள் தவறாமல் தொட்டபெட்டா செல்கின்றனர். இச்சிகரத்திற்கு செல்ல கோத்தகிரி சாலையில் இருந்து 3 கிமீ, தூரம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலை வழியாக பயணிக்க வேண்டும். நுழைவாயில் பகுதியில் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா மூலம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து தொட்டபெட்டா சிகரம் செல்வதற்கான வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்ய பாஸ்ட் டேக் எனப்படும் மின்னணு பரிவர்த்தனை தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. சீசன் சமயங்களில் நுழைவு கட்டணம் செலுத்தி செல்வதற்காக ஏராளமான வாகனங்கள் அணி வகுத்து நிற்கும். இதனால் ஊட்டி – கோத்தகிரி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதை தடுக்க நுழைவு கட்டணம் வசூலிக்கும் இடத்தை மாற்ற வனத்துறை நடவடிக்கை எடுத்தது. நுழைவாயில் பகுதியில் இருந்து சிகரத்திற்கு செல்லக்கூடிய சாலையில் பாஸ்ட் டேக் நுழைவு கட்டண வசூல் மையம் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் தொடங்குவதால் இன்று முதல் வரும் 22ம் ேததி வரை 7 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா செல்ல அனுமதியில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.