சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த சேஷாபுரம் கிராமம் அருகே உள்ள மாந்தோப்பில் கடந்த 12ம்தேதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து சித்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில் கொலையானவர் சித்தூர் மாவட்டம் துமிந்தபாளையம் கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி (49). இவரது கணவர் சேஷய்யா. கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து விட்டனர். கஸ்தூரி ஆடுகள் மேய்த்து குடும்பம் நடத்தி வந்தார். அதே கிராமத்தில் தொழிலாளி ஸ்ரீராமுலு (வயது 52) என்பவரும் ஆடுகளை மேய்த்து வந்தார்.
இவருக்கு மனைவி இல்லை. இந்நிலையில் கஸ்தூரியும், ஸ்ரீராமுலுவும் தினமும் ஒன்றாக ஆடு மேய்த்து வந்தபோது அவர்களிடையே தகாத உறவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் கஸ்தூரி அதே கிராமத்தைச் சேர்ந்த சில ஆண்களுடன் அடிக்கடி சிரித்து பேசுவாராம். இதனால் சந்தேகமடைந்த ஸ்ரீராமுலு, கஸ்தூரியை கண்டித்துள்ளார். இருப்பினும் கஸ்தூரி ஆண்களுடன் பேசி பழகுவதை நிறுத்தவில்லையாம். கடந்த 11ம்தேதி இருவரும் வழக்கம்போல் வனப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீராமுலு தான் வைத்திருந்த அரிவாளால் கஸ்தூரியை சரமாரியாக வெட்டியுள்ளார். கழுத்து, வயிறு என பல பகுதிகளில் வெட்டு விழுந்ததால் கஸ்தூரி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் சடலத்தை சேஷாபுரம் கிராமம் அருகே உள்ள மாந்தோப்பில் வீசிவிட்டு ஸ்ரீராமுலு தலைமறைவாகிவிட்டார் என தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவான ஸ்ரீராமுலுவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், வனப்பகுதியில் பதுங்கியிருந்த ஸ்ரீராமுலுவை பிடித்து நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து ஸ்ரீராமுலுவை போலீசார் நேற்று கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.