புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படைத்தளத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அப்போது இந்திய ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே 3 நாள் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இறுதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் வீர மரணம் அடைந்தனர். பெரும் சோகத்தை ஏற்படுத்திய பதான்கோட் தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ-முகமது தீவிரவாத அமைப்பு என்பதும், தாக்குதலுக்கு ஷாகித் லத்தீப் மூளையாக செயல்பட்டதும் தெரிய வந்தது.
கடந்த 1993ம் ஆண்டு சட்டவிரோதமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நுழைந்த ஷாகித் லத்தீப் கைது செய்யப்பட்டு ஜம்மு சிறையில் 16 ஆண்டுகள் அடைக்கப்பட்டவர். பின்னர் 2010ல் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டார். பாகிஸ்தானில் அவர் ஜிகாதி குழுவில் இணைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் சியால்கோட் மாவட்டம் டாஸ்கா நகரில் உள்ள மசூதி அருகில் அவரது கூட்டாளிகள் இருவருடன் இருந்தபோது, அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய 3 பேர் அவர்களை சுட்டுக்கொன்று விட்டு தப்பி சென்றனர்.