சென்னை: ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தீர்வு காணக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது. ஊதிய புரண்பாடுகளை கலைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் காரணமாக மாணவ, மாணவியர் படிப்பு பாதிக்கப்படுவதாக கூறி, சென்னையை சேர்ந்த மாலினி என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், முன்பு விடுமுறை நாட்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தற்போது வேலை நாட்களில் போராட்டத்தில் ஈடுபடுவதால் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு இறுதி தேர்வு நெருங்கியுள்ள நிலையில் இந்த போராட்டத்துக்கு தீர்வு காண அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது; போராட்டத்தை கடந்த 8ம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் வாபஸ் பெற்று விட்டதாக கூறிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கில் மேலும் எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என்று கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.