காசா: காசா பகுதியில் மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகள் வான்வழியாக வீசும் பெரும்பாலான பொருட்கள் கடலில் வீழ்ந்து வீணாவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இஸ்ரேலின் தொடர் தாக்குதலை அடுத்து காசாவில் இருந்து கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்த மக்கள் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை பொருட்களின்றி தவித்து வருகின்றனர். இதை அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ விமானங்கள் மூலம் காசாவின் முக்கிய நகரங்களில் உணவு பொருட்களை பாராசூட்கள் மூலம் வீசி வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை அரபு நாடுகளின் விமானம் ஒன்று வடக்கு காசா பகுதிகளில் பாராசூட்கள் மூலமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வீசியது. ஆனால் பெரும்பாலான மனிதாபிமான உணவு பொருட்கள் கடலில் விழுந்து விட்டதால் அவை அனுப்பப்பட்ட நோக்கம் நிறைவேறாமல் வீணாகி விட்டதாக வடக்கு காசா பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பசியால் வாடும் மக்கள் தரையில் மோதி சிதறும் ஒரு சில பொருட்களை சேகரிக்க நீண்ட தூரம் ஓடி செல்வதால் மயங்கி விழுந்து சுய நினைவு இழப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். காசா முனையில் உள்ள 20 லட்சம் பேரில் சுமார் 6 லட்சம் பேர் போதிய உணவு, குடிநீர் இன்றி பரிதவிப்பதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.