சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது தொடங்கியுள்ள அக்னி நட்சத்திரம் மேலும் படுத்தி எடுக்க தொடங்கியுள்ளது. இதுவரை இல்லாத வகையில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வெளியில் செல்லக்கூடியவர்கள் உடல் வெப்பத்தை சற்று தணிக்கும் வகையில் இளநீர், ஜூஸ், மோர் போன்ற நீர்சத்து நிறைந்த பானங்களை அருந்துகின்றனர். இதை தவிர, கோடைக்காலத்தை சாமாளிக்க மதுப்பிரியர்களின் முதல் தேர்வாக கூலிங் பீர் தான் உள்ளது.
வழக்கமாக கோடைக்காலங்களில் பீர் விற்பனை மற்ற மதுபானங்களை காட்டிலும் கணிசமாக அதிகரிப்பது வழக்கம். ஆனால், இந்தாண்டு இயல்பை விட வெப்பம் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான மதுப்பிரியர்கள் பீர் வாங்குவதால் விற்பனை உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, சாதாரண தினங்களில் 80 முதல் 90 ஆயிரம் பெட்டிகள் வரை பீர் விற்பனை நடைபெறுவது, தற்போது 1.30 லட்சத்திற்கும் மேற்பட்ட பீர் பெட்டிகள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கத்தைவிட 44 சதவீதம் வரை அதிகமாகும். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள ஐந்து மண்டலங்களிலும் பீர் விற்பனை மட்டும் 18 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.