புதுடெல்லி: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பரில் புயல் மற்றும் கனமழையால், வடமாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வெள்ள பாதிப்புகளை ஒன்றிய குழுவும் நேரில் வந்து பார்வையிட்டு அறிக்கை கொடுத்தது. ஆனால் உரிய நிவாரணத்தை ஒன்றிய அரசு தராததால் கடந்த ஏப்ரல் 3ம் தேதி தமிழ்நடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,‘‘தமிழ்நாட்டில் மிக்ஜாங் புயல் மற்றும் தென் மாவட்ட பாதிப்புகளுக்கு என்று மொத்தம் ரூ37907 கோடி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் குமணன் ஆகியோர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வின் முன்னிலையில் ஒரு முறையீட்டை வைத்தனர்.
அதில்,‘‘ இது மாநிலத்தின் மிக முக்கிய விவகாரம் என்பதால் அந்த மனுவை விரைந்து பட்டியலிட்டு விசாரித்து ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இதுதொடர்பாக மின் அஞ்சலை அனுப்புங்கள், அதுகுறித்து உடனடியாக பரிசீலனை செய்து வழக்கை பட்டியிலிட்டு விசாரிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கானது அடுத்த ஓரிரு நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர்.