சென்னை : சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ.6.74 கோடி மதிப்பீட்டில் அதிநவீன இதய கேத்லேப் ஆய்வகத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர்அளித்த பேட்டி: கடந்த ஆண்டு இதயம் காப்போம் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இது தமிழ்நாட்டில் உள்ள 2286 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8713 துணை சுகாதார நிலைங்களிலும் மாரடைப்புகளுக்கான முன் அறிகுறிகளோடு வருபவர்களுக்கு, லோடிங் டோஸ் என்று மருந்துகள் தரப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை தமிழ்நாடு முழுவதும் 2 ஆஸ்பிரின் மாத்திரைகள், 4 க்ளோபிடோக்ரல், 8 அட்ரோவாஸ்டாட்டின் என்று 14 மாத்திரைகள் தரப்பட்டு வருகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இதய நோயினால் பாதிப்புக்கு உள்ளானவர்களை 100% காத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
100% உலக சுகாதார நிறுவனமும், ஐசிஎம்ஆர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதற்கும், மாரடைப்பிற்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்லிவிட்டனர். மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் எதிர்காலத்தில் நோய் பாதிப்புகள் குறித்து கண்டறிவது தொடர்பாக உலக மருத்துவ மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாடு வருகிற 19, 20, 21 ஆகிய நாட்களில் நடக்கிறது. அதில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த மருத்துவ நிபுணர்கள் கலந்துகொள்கின்றனர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி, மருத்துவத்துறை பேராசிரியர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.