தேனி: உடலுறுப்புகளை தானம் செய்து அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள வடிவேலுவின் உடலுக்கு அரசு சார்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தேனி மாவட்டம் சின்னமனூரில் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் வடிவேல் (37) இன்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. இதில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். கடந்த 23ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இவர், தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்கியிருந்தார்.
இதற்குமுன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதி சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதுதொடர்பாக முதமைச்சர் பதிவில், உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.
தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் நடக்கும் என தெரிவித்திருந்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்பு அறிவித்தனர். இதனிடையே இறுதிச்சடங்கில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது; உடல் உறுப்பு கொடையாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும் எனும் தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க தேனி, சின்னமனூரை சார்ந்த வடிவேல் அவர்களின் திருவுடலுக்கு மாவட்ட ஆட்சி நிர்வாகத்துடன் இணைந்து அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.