சென்னை: சென்னையில் இருந்து டெல்லி செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் டெல்லி செல்ல இருந்தது. இதில் பயணிக்கவிருந்த 164 பயணிகள், காலை 5 மணி முதல் காத்திருந்தனர். பயணிகள் பாதுகாப்பு சோதனைகள் அனைத்தும் முடிந்த நிலையில், விமானத்தில் இயந்திர கோளாறு இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் பயணிகள் அனைவரும் ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.
விமான பொறியாளர்கள் விமானத்தின் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 மணி நேரத்திற்கு மேலாக விமான நிலையத்தில் பயணிகள் காத்திருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், அங்குள்ள கவுண்டர்களை சூழ்ந்துக் கொண்டு கேள்விகளை எழுப்பினர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்பினர். இந்நிலையில் அவர்களை மாற்று விமானத்தில் டெல்லிக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடந்து வருகிறது.