சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஸ்விக்கி மூலம் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். கொரோனா மற்றும் கொரோனா காலத்திற்கு பிறகு ஸ்விக்கி, சோமாடோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்தன. மக்கள் பலர் நேரடியாக சென்று உணர சாப்பிடாமல், ஆன்லைன் மூலமாக தங்கள் இருப்பிடங்களுக்கே உணவு கிடைக்க வழிவகை செய்யும் ஸ்விக்கியில் ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகின்றனர். தற்போது உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் குறிப்பாக சென்னை, வேலூர், ஆரணி, குடியாத்தம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் உணவு டெலிவரி சேவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு 10 ரூபாய், ஒரு ஆர்டருக்கு குறைந்தபட்சம் 30 ரூபாய் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்லாட் முறையை திரும்ப பெறவும், ஏற்கனவே வழங்கி வந்த “Turn Over தொகையை மீண்டும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காப்பீடு கட்டணத்தை ஆர்டர் தொகையுடன் இணைக்காமல் தனியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலை நிறுத்த போராட்டத்தில் 10 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.