Thursday, May 16, 2024
Home » தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: தேர்தல் பிரசாரத்தில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் பேட்டி

தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: தேர்தல் பிரசாரத்தில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் பேட்டி

by Mahaprabhu

சென்னை: எங்கு சென்றாலும் மக்கள் பேராதரவு மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது என்றும், தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் கூறியுள்ளார். மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் அண்ணாநகர் தெற்கு பகுதியில் இன்று காலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அண்ணாநகர் லீக் கிளப் அருகில் பிரசாரத்தை தொடங்கிய அவர் விநாயகபுரம் 1, 2, 3 தெரு, அன்னை சத்தியா நகர் 1 முதல் 14 தெருக்கள், திருக்குமரபுரம் 1 முதல் 5 தெருக்கள் பெரியார் பாதை மேற்கு சிவசுப்பிரமணியன் நகர், செந்தில் நகர், பெரியார் பாதை (அமிர்த வள்ளி திருமண மண்டபம் அருகில்), வள்ளலார் தெரு, முல்லை தெரு, பத்மநாப நகர் மெயின் ரோடு,கோ.சு. மணி தெரு, இந்திரா காந்தி தெரு, இளங்கோ அடிகள் தெரு, சமயபுரத்தம்மன் தெரு, அண்ணாசாமி தெரு, பெரியார் பாதை, கண்ணியப்பன் தெரு, பாரதி தெரு, பெரியார் பாதை மீன் மார்க்கெட், அண்ணா நெடும்பாதை, நேரு தெரு, அவ்வை தெரு, ஆண்டவர் தெரு, கண்ணகி தெரு, பாரி தெரு, காமராஜர் நகர், காந்தி ரோடு சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இறுதிக்கட்ட அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அவருக்கு பொதுமக்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தில் மாவட்ட செயலாளர் சிற்றரசு, வில்சன் எம்பி, எம்.கே.மோகன் எம்.எல்.ஏ, அண்ணாநகர் தெற்கு பகுதி செயலாளர் ராமலிங்கம், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் கார்த்திக் மோகன், அண்ணாநகர் தொகுதி தேர்தல் பார்வையாளர் பத்மபிரியா உள்ளிட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பிரசாரத்தின் போது வேட்பாளர் தயாநிதிமாறன் அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. எங்கு சென்றாலும் மக்கள் பேராதரவு தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக கூட்டணிக்கு சிறப்பாக உள்ளது. குறிப்பாக மத்திய சென்னை அண்ணாநகர் பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் நாங்கள் செய்து வருகிறோம். மக்கள் ஆர்வத்துடன் கண்டிப்பாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்போம் என்று உறுதியை எங்களுக்கு அளித்து இருக்கிறார்கள். இதை பார்க்கும் போது மத்திய சென்னை தொகுதி மட்டுமல்ல தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.

சிந்தாதிரிப்பேட்டையில் தேர்தல் பரப்புரை முடியும். இந்த முறை தலைவர் மு.க.ஸ்டாலினின் இறுதிக்கட்ட பிரசாரத்தை பெசன்ட்நகரில் முடிக்கிறார். மத்திய சென்னை, தென்சென்னை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரமாண்ட கூட்டம் அங்கு நடைபெறுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் ஆதரவு மு.க.ஸ்டாலின் பக்கம் தான் இருக்கிறது. அவர் கடந்த 3 ஆண்டுகளில் சொன்னதை செய்தார். செய்வதை சொன்னார். சொல்லாததையும் செய்தார். குறிப்பாக பெண்கள் கலைஞர் உரிமை தொகை அனைத்து மகளிரையும் சென்றடைந்துள்ளது. பெண்கள் திமுகவுக்கு தான் ஓட்டளிப்போம். மு.க.ஸ்டாலினுக்கு தான் ஓட்டளிப்போம் என்று உறுதியாக இருக்கிறார்கள். அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பவர் மு.க.ஸ்டாலின் தான் என்பது தெளிவாக தெரிகிறது. பாஜகவின் தேர்தல் அறிக்கை பெரிய தாக்கம் தாங்க. அதாவது என்ன தாக்கம் என்றால், 2014ல் ஒவ்வொருவர் பேங்க் அக்கவுண்டிலும் கருப்பு பணத்தை ஒழித்து 15 லட்சம் ரூபாய் போடுறேன் என்று சொன்னீங்க. அந்த 15 லட்சத்தை எங்களால் இதுவரைக்கும் எண்ண முடியவில்லை. அதுக்குள்ள 10 வருடம் கழித்து இன்னொரு பொய்யை சொல்றீங்க. 70 வயதுக்கு மேல் இன்சூரன்ஸ் தாரேன்னு சொல்றீங்க. திடீரென்று அவருக்கு தமிழ் மீது பாசம் வந்துருச்சாம். இந்தியாவில் தமிழை வளர்க்க முடியவில்லை.

ஆனால் என்ன பண்றாரு உலகத்தில் போய் திருவள்ளுவர் அகடாமி வைக்க போறாராம். கோழிப்பிடிக்க தெரியாதவன் வைகுண்டத்திற்கு வழி கேட்டானாம். முதல் செம்மொழி எது தமிழ். தமிழ் வந்த பிறகு தான் சமஸ்கிருதம் வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பார்த்தீர்கள் என்றால் தென்னிந்திய மொழிகளுக்கு ரூ.68 கோடி தான் செலவு செய்து இருக்கிறார். ஆனால் சமஸ்கிருதத்தை வளர்ப்பதற்கு ரூ.388 கோடி செலவு செய்து இருக்கிறார். இதில் பார்த்தீர்கள் என்றால் அவரது மனநிலை தெரிகிறது. தேர்தலுக்காக மட்டுமே தமிழ் மொழியை பேசுகிறாரே தவிர, இதுவரைக்கும் தமிழுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என்ன செய்தீர்கள். அதே போல் பார்த்தீர்கள் என்றால் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். எங்கள் நிதியை ஒதுக்குங்கள். நிவாரணம் கொடுங்கள். அதுக்கு எல்லாம் அவருக்கு காது கேட்கவில்லை. அண்ணாமலையை பற்றி பேசினால் மட்டும் அவருக்கு காது கேட்கிறது. சில சமயம் காது செவிடாக இருக்கிறது. சில சமயம் காது கேட்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

You may also like

Leave a Comment

20 − 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi