Thursday, May 16, 2024
Home » பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில் அறநிலையத்துறை பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!

பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில் அறநிலையத்துறை பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!

by Kalaivani Saravanan

மதுரை: பழனி கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கில் இந்து சமய அறநிலைய துறை ஆணையர், வருவாய் துறையினர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் உலக பிரசித்திப்பெற்ற கோயில். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழனி முருகன் கோயிலுக்கு வருடம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் வருகை புரிகின்றனர்.

பழனியில் கடையை சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. இது பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவானது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளான கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்திருந்தது. அப்போது, நீதிபதிகள் பல உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்கள்.

கிரிவல பாதை அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்து 159 கட்டுமானங்கள் ஆக்கிரமித்திருக்கிறது என தெரிவிக்கப்பட்ட போது இவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், பழனி கிரிவல பாதையில் உள்ள விண்ட் ஸ்டேஷன், நெடுஞ்சாலைகள் ஆக்கிரமிப்பு என மொத்தம் 309 ஆக்கிரமிப்பு இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, பழனி கோயில் மற்றும் கிரிவல பாதை ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த புள்ளி விவரங்களை வழங்குவதில் மாறுபட்ட கருத்து உள்ளது. இதை வருவாய்த்துறையினர், கோயில் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். கிரிவல பாதையில், கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு, மாற்று இடம் வழங்குவதில் நியாயம் உள்ளது. அதே நேரத்தில் கோயில் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறையின் நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் மாற்று இடம் வழங்க வேண்டுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, பக்தர்களை அழைத்து செல்வதற்கு புதிய பேருந்து வாங்குவது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்ற டெண்டர் விடுவதற்கு நிர்வாகம் தயார் நிலையில் இருக்கிறது. தேர்தல் முடிந்த ஒரு சில நாட்களில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்படும் என கோயில் தரப்பிலும், அரசு தரப்பிலும் வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார். எனவே ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்தும், புதிய பேருந்து வாங்க டெண்டர் விடுவது குறித்தும் உத்தரவுகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இந்து அறநிலையத்துறை ஆணையர், வருவாய்த்துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

You may also like

Leave a Comment

19 − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi