Sunday, May 12, 2024
Home » தமிழகத்தில் ரூ.131 கோடி மதிப்பீட்டில் 2வது பிரமாண்ட இரும்பு மேம்பாலம்: வியாபார தலைநகரான தி.நகரில் பணி மும்முரம்

தமிழகத்தில் ரூ.131 கோடி மதிப்பீட்டில் 2வது பிரமாண்ட இரும்பு மேம்பாலம்: வியாபார தலைநகரான தி.நகரில் பணி மும்முரம்

by Mahaprabhu

சிறப்பு செய்தி: தமிழ்நாட்டில் இரண்டாவது இரும்பு மேம்பாலம், ரூ.131 கோடி மதிப்பீட்டில் தி.நகரில் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் போக்குவரத்து நெரிச்சல் பெருமளவு குறையும் என்று அதிகாரிகள் ெதரிவித்தனர். சென்னையின் வர்த்தக பகுதியின் இதயமாக இருக்கிறது திநகர். இந்த பேருந்து நிலையத்துக்கு, தினமும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு சென்னையின் புறநகர் பகுதியில் இருந்து 2000 டிரிப் வந்து செல்கிறது. இதனால், தி.நகரில் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. சென்னையின் முக்கிய வணிக மையமான தி.நகரில் கூட்ட நெரிசல் அதிகமுள்ள நாட்களில் அதிகபட்சமாக, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ட்ரிப் வரையில் இயக்கப்படுகின்றன. தி.நகருக்கு வந்து செல்லும் பேருந்து சேவைகள் அதிகரிப்பால், தி.நகர் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அண்ணாசாலையில் இருந்து சிஐடி நகர் பகுதிக்கு பேருந்துகள் திரும்பும் போது சைதாப்பேட்டையில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சென்னையில் எங்கெல்லாம் மேம்பாலம் தேவை என்பதை ஆய்வு செய்து சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்டவை பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் 1வது மெயின் ரோடு இடையே ரூ.131 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை தொடங்கி உள்ளது. இந்த பாலம் முழுவதும் இரும்பால் கட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இரும்புப் பாலம் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மாநிலத்தின் 2வது முழு இரும்பு பாலம் தற்போது வர்த்தக பகுதியான தி.நகரில் அமைகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் : இந்த பாலம் ரூ.129.64 கோடியில் அமைகிறது. தற்போது பல பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலத்துக்கு 53 பில்லர்கள் 8.5 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது. தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள மேம்பாலம் 747 மீட்டர் நீளம் கொண்டது. இந்த மேம்பாலத்தின் சாய்தளத்தை தகர்த்து புதிதாக மேம்பாலம் 1.2 கிலோ மீட்டர் அளவில் அமைக்க உள்ளது.

தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து பர்கிட் சாலை மற்றும் மேட்லி சுரங்கப்பாதை சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து தென்மேற்கு போக் சாலை மற்றும் புதிய போக் சாலை சந்திப்பு, சிஐடி நகர் முதல் மெயின் சாலை மற்றும் சிஐடி நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகிய 3 சந்திப்புகளையும் இணைக்கும் வகையில் இந்த பாலம் அமையும். இந்த மேம்பாலம் அமைத்தால் தி.நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். புதிய மேம்பாலம் 1.2 கிலோ மீட்டர் நீளத்தில், 8.40 மீட்டர் அகலத்தில் ரூ.131 கோடி செலவில் அமைகிறது. வாகனங்கள் பாலத்தின் மீது சென்றால் அதிர்வை தாங்கும் வகையில் புதிய தொழில் நுட்பம் இருக்கும். கூடுதல் பாதுகாப்பிற்காக பரிந்துரைக்கப்பட்ட எடையை விட 2.5 மடங்கு அதிக எடையில் தூண் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள பாலத்தின் சாய்தளத்தை இணைக்கப்படும் பகுதியில் மேம்பாலத்திலிருந்து வெளியேறுவதற்கும், நுழைவதற்கும் ஏற்றவாறு பாலம் அமைக்கப்பட உள்ளது. சென்னையில் அமைக்கப்பட்டு வரும் பாலங்கள் அனைத்தும் சிமென்ட் கான்கிரிட் கொண்டு தான் அமைக்கப்படும். ஆனால் முதல் முறையாக இரும்பு தூண்கள் கொண்டு மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இரும்பு தூண்களுக்கு மேல் சிமென்ட் கான்கிரிட் கலவை வைக்கப்பட உள்ளது. தரைக்கு உள்ளே அமைக்கப்படும் தூணின் அடிப்பகுதி சிமென்ட் கான்கிரிட் கொண்டு அமைக்கப்படுகிறது. தூண் மற்றும் பாலத்தை தாங்கி பிடிக்கும் பகுதி இரும்பால் அமைக்கப்படுகிறது.

சேலம் இரும்பு ஆலையில் இந்த தூண் போன்ற வடிவமைப்பை உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த இரும்பு தூணானது 50 ஆண்டுகள் ஆயுட் காலம் உடையது. இணைப்பு முடிந்த உடன் பாலத்தின் மேல் பகுதி அமைக்கும் பணி நடைபெறும். பாலத்தின் மேல் பகுதி வழக்கம் போல் சிமெண்ட் கான்கிரிட் கொண்டு மேற்கொள்ளப்படும். 24 மாதங்களில் பணியை முடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் விரைவில் பணிகள் முடிக்கப்படும். அதன்படி 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். சென்னையில் இரும்பு தூணால் அமைக்கப்படும் முதல் மேம்பாலம் இதுதான். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

four × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi