காபூல்: ஆப்கானிஸ்தானில் பேய் மழை கொட்டித் தீர்த்ததில் ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் பருவமழை கடந்த சில நாட்களாக கொட்டி வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிறைந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் கனமழை பெய்தது. இதில், வடக்கு பிராந்தியத்தில் உள்ள பக்லான், தாகர் மற்றும் பதக்ஷன் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பக்லானில் மட்டுமே ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட மக்கள் மழை வெள்ளத்திற்கு பலியாகி இருப்பதாக ஐநாவின் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பும் உலக உணவு அமைப்பும் தெரிவித்துள்ளது.
அங்குள்ள பக்லானி ஜெயித் பகுதியில் மட்டும் 1,500 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக ஐநா அவசரகால மீட்பு அமைப்பின் முகமது பஹிம் தெரிவித்துள்ளார். ஆனால் தலிபான் அரசு வெள்ளிக்கிழமை இரவில் 62 பேர் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக கூறி உள்ளது. அதே சமயம், தலிபான் உள்துறை அமைச்சகம் கனமழை பாதிப்பை தேசிய பேரிடாக அறிவித்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது.