சேலம் : சேலம் மாவட்டம் தாரமங்கலம் அதிமுக நகர செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1 கோடி ரொக்கம், தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாரமங்கலம் நகராட்சி அதிமுக நகர செயலாளராக உள்ள பாலசுப்ரமணியம் தாராமங்கல நகர்மன்ற கவுன்சிலராகவும் இருந்து வந்துள்ளார். தமது வீட்டை ஒட்டியே நகைக்கடைகள் நடத்தி வரும் பால சுப்ரமணியம், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கட்டுக்காட்டாக பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.
வருமான வரித்துறை உதவி ஆணையர் பிரதீப் தலைமையில் 8 பேர் கொண்ட குழு பால சுப்ரமணியம் வீடு மற்றும் நகைக்கடைகளில் இரவு முதல் அதிகாலை 2 மணி வரை சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத சுமார் ரூ.1 கோடி ரொக்கம் மற்றும் கிலோ கணக்கில் தங்க நகைகள் சிக்கியுள்ளன. இவற்றை அட்டை பெட்டிகளில் போட்டு வைத்து சீலிட்டு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
இதே போல வட சென்னை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஓட்டேரி, ஏழு கிணறு உள்ளிட்ட 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழ்நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.2.60 கோடியும் திருச்சியில் ரூ.55 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.