சென்னை: தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிக்க ஒரு மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு வழங்கும் நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம், நோய்த்தொற்று மற்றும் அவசரகால பணிகளை கூர்ந்தாய்வு செய்து விரைவுபடுத்தும் பணிகளில் ஈடுபடுவர் என்று தமிழக அரசு அறிவித்தது. அதேபோன்று, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சென்னையை தவிர 25 மாவட்டங்களுக்கு ஏற்கனவே கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மேலும் 12 மாவட்டங்களுக்கு புதிய கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி,
அரியலூர் – அருண் ராய் (குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர்)
கோவை – ஜெயஸ்ரீ முரளிதரன் (டிட்கோ நிர்வாக இயக்குனர்)
கள்ளக்குறிச்சி – பிரதீப் யாதவ் (நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர்)
காஞ்சிபுரம் – பி.செந்தில்குமார் (ஊரக வளர்ச்சி துறை செயலாளர்)
நாகப்பட்டினம் – ரமேஷ்சந்த் மீனா (எரிசக்தி துறை செயலாளர்)
நாமக்கல் – ஜ.குமரகுருபரன் (தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர்)
புதுக்கோட்டை – எஸ்.நாகராஜன் (நில நிர்வாக துறை ஆணையர்)
ராமநாதபுரம் – கே.நந்தகுமார் (மனிதவள மேலாண்மை துறை செயலாளர்)
ராணிப்பேட்டை – ஷில்பா பிரபாகர் சதீஷ் (தேசிய சுகாதார திட்ட இயக்குநர்)
சேலம் – பி.சங்கர் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மேலாண்மை இயக்குநர்)
திருப்பத்தூர் – ககன்சிங் பேடி (மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர்)
திருப்பூர் – எஸ்.விஜயகுமார் (சிஎம்டி டான்சி முதன்மை செயலாளர்)
இவர்கள் மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிப்பது, இயற்கை சீற்றம், நோய்த்தொற்று மற்றும் அவசரகால பணிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.