சென்னை: சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதையை செலுத்தும் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. ஆகஸ்ட் 31ம் தேதிவரையிலான கடந்த ஓராண்டில் பணியின் போது உயிர்துறக்கும் காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி சென்னையில் காவல்துறை தலைமை இயக்குனர் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தூர் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் உள்ளிட்டோர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அப்போது 144 குண்டுகள் முழங்கியும் மரியாதை செலுத்தப்பட்டது. ஈரோதங்களது டு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தட்டக்கரை சிறப்பு முகாமில் காவலர் வீரவணக்கநாள் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் டிஜிபிக்கள், தற்போதைய தமிழக சிறப்பு இலக்கப்படை தலைவர் முருகன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். வீரப்பன் தேடுதல் வேட்டையில் இறந்த சிறப்பு இலக்க படை முன்னாள் காவலர்கள் பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து போலீசாரின் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையும் செய்யப்பட்டது. திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடை பெற்ற வீரவணக்க நிகழ்ச்சியில் கடந்த ஆண்டுகளில் காவல்துறையில் வீர, தீர பணிகளில் ஈடுபட்டு இறந்தபோது தங்களது இன்னுயிர் நீத்த 188 போலீசாரின் பெயர்கள் வாசிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து நீத்தா நினைவு தூணில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையர் காமினி, திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் பகலவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து 66 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தி 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிஐஜி, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். புதுச்சேரியில் நடைபெற்ற காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு காவலர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.