புதுடெல்லி: பிரதமராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்ட மோடி, விவசாயிகள் நிவாரண நிதிக்கான ரூ.20,000 கோடியை விடுவித்து முதல் கையெழுத்திட்டார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி தொடர்ந்து 3வது முறையாக ஒன்றியத்தில் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக மோடி உள்ளிட்ட 72 அமைச்சர்கள் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, முறைப்படி பிரதமராக மோடி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
3வது முறை பிரதமரானதும் விவசாயிகளுக்காக மோடி தனது முதல் கையெழுத்திட்டார். நாடு முழுவதும் பிஎம் கிசான் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.6,000 நிதி 3 கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் 17வது தவணையாக விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 நிதி வழங்குவதற்காக ரூ.20,000 கோடியை விடுவித்து மோடி கையெழுத்திட்டார். இதன் மூலம், 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். இந்த நிதி அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.