புதுடெல்லி: ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான வழக்குகளை ஆகஸ்ட் 22, 23 ஆகிய இரு தேதிகளில் விசாரித்து முடிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா தொடர்ந்த பிரதான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், நிபுணர்குழு பரிந்துரை அடிப்படையில் கூடுதல் பரமரிப்பு பணி உள்ளிட்ட விவகாரங்களில் ஆராய்ந்து முடிவெடுக்கப்பட உள்ளது. எனவே இந்த வழக்கின் விசாரணையை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து அப்போது குறுக்கிட்ட ஸ்டெர்லைட் ஆலை தரப்பு மூத்த வழக்கறிஞர், இந்த வழக்கில் ஆலையை திறப்பது தொடர்பான பிரதான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்.மேலும் ஏப்ரல் 10ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என தெரிவித்தார். இதையடுத்து அதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்,‘‘உச்ச நீதிமன்ற உத்தரவை அரசு படிப்படியாக செயல்படுத்த உள்ளது. வரும் ஜூன் 1ம் தேதிக்குள் அது முழுமையாக அமல்படுத்தப்படும்’ என்று தெரிவித்தார். இதையடுத்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், கடந்த ஏப்ரல் 10ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை ஜூன் 1க்குள் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் எழுத்துப்பூர்வ வாதங்களை ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய இரு தேதிகளில் விரிவாக விசாரித்து முடிக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்தனர்.