சென்னை: மாநில கல்வி கொள்கை தயார் நிலையில் உள்ளதாகவும், அதனை தமிழில் மொழி பெயர்க்கும் பணிகள் தொடங்கும் எனவும் மாநில கல்வி கொள்கை குழு வட்டாரங்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஒன்றிய அரசு புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தியது. அதனை ஏற்க முடியாது என கூறி தமிழகத்திற்கென பிரத்தியேகமாக மாநில கல்வி கொள்கை உருவாக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்தார்.
அதன்படி ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 உறுப்பினர்கள் அடங்கிய குழுவானது மாநில கல்வி கொள்கையை தயாரிக்கும் பணியில் ஓராண்டுக்கும் மேலாக ஈடுபட்டுவந்தது. இந்த நிலையில் இந்த அறிக்கை தயாராகியுள்ளது. இன்று உறுப்பினர்களின் ஒப்புதல் பெறுவதற்காகன பிரத்தியேக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்த அறிக்கைக்கு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. மொத்தம் உள்ள 14 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் நேரடியாக கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் 2 உறுப்பினர்கள் ஆன்லைன் வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றனர்.
பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். வரகூடிய நாட்களில் இந்த அறிக்கையை தமிழில் மொழிபெயர்க்க கூடிய பணிகள் நடைபெறும் என குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்த பணிகளை முடித்து செப்டம்பர் மாதம் 4-வது வாரத்தில் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.