மாட்ரிட்: ஸ்பெயின் வந்தடைந்தேன்! ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக ஐரோப்பியப் பயணம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த சனிக்கிழமை இரவு ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். 8 நாட்கள் அரசு முறைப்பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
ஸ்பெயினில் இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. பல்வேறு முதலீட்டாளர்களை முதலமைச்சர் சந்திக்க உள்ளார். மேலும் தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளார். ஸ்பெயின் சென்ற பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியதாவது;
ஸ்பெயின் வந்தடைந்தேன்! ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம்!
ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதர் தினேஷ் கே.பட்நாயக், அவர்கள் தூதரக அதிகாரிகளுடன் சிறப்பான வரவேற்பை அளித்தார்.
இன்று மாலை ஸ்பெய்ன் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களைச் சந்திக்கிறேன்.
தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளேன். என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.