சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி கோயில் திருவிழாவில் பக்தர்கள் 2 லட்சம் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். 1000 ஆண்டுகள் பழமையான சேவுகன் பெருமாள் அய்யனார் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்ட திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
4 ரத விதிகளை கடந்து தேர் நிலையத்தை அடைந்ததும் பக்தர்கள் அங்குள்ள தேர் நிலை கல்லை நோக்கி தேங்காய்களை வீசினர். நேர்த்தி கடனுக்காக பகலில் தொடங்கி இரவு வரை சுமார் 2லட்சம் தேங்காய்கள் நிலை கல்லில் வீசப்பட அங்கிருந்தவர்கள் ஹெல்மெட் அணிந்து சிதறிய தேங்காய்களை சேகரித்தனர்.
இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கூத்தாடிவயல் கிராமத்தில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், குதிரை சிலைகளை தோளில் சுமந்த பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக அய்யனார் கோயிலுக்கு எடுத்து சென்றனர்.