சென்னை: போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கை: சிவராத்திரி, சனி மற்றும் ஞாயிறு வாரவிடுமுறை நாட்களை முன்னிட்டு போக்குவரத்து கழகம் தரப்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு கூடுதலாக நேற்று 270 சிறப்பு பேருந்துகளும், இன்று 390 பேருந்துகளும் நாளை 430 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
மேலும், கோயம்பேட்டிலிருந்து 70 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஞாயிறுக்கிழமை சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த வார இறுதியில் நேற்று 9,096 பயணிகளும், வெள்ளிக்கிழமை 7,268 பயணிகளும் சனிக்கிழமை 3,769 பயணிகளும் மற்றும் ஞாயிறுக்கிழமை 9,011 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.