சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தின் தொழில் முனைவோர் பிரிவு புதிய கண்டுபிடிப்புகள், தொழில் முனைவை ஊக்குவிக்கும் வகையில் 9ம் ஆண்டு தொழில்முனைவோர் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. வருகிற 10ம் தேதி வரை மாநாடு நடைபெற உள்ளது. ஐஎஸ்ஓ, ஸ்டார்ட்அப் இந்தியா, யுனெஸ்கோ சான்றிதழ்களைப் பெற்றுள்ள மாணவர்களால் நடத்தப்படும் இந்த தொழில்முனைவோர் சந்திப்பு இந்தியாவிலேயே முதன்முறையாகும். இதுகுறித்து ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி கூறுகையில், ‘மாநாட்டை அனைவரும் இலவசமாகப் பார்க்கலாம். 1000க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், இந்தியா முழுவதும் இருந்து 400க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 15,000 மாணவர்கள் பங்கேற்கின்றனர்’ என்றார்.