சென்னை: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணை:
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் பொது நூலகங்களுக்கு தேவையான புத்தகங்களை கொள்முதல் செய்வதற்காக நிபுணர்கள் அடங்கிய தேர்வுக்குழு ஏற்படுத்தப்படும்; அதன்படி பொது நூலகங்களுக்கான நூல் கொள்முதலில் ஒளிவுமறைவின்றி வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கடந்த 2021 அக்டோபரில் ஒரு குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது.
குழுவின் பரிந்துரையின் பேரில் வெளிப்படைத்தன்மையான நூல் கொள்முதல் கொள்கையை பின்பற்றி கொள்முதல் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அரசிடம் கேட்டிருந்தார். பொது நூலக இயக்குநரின் கருத்துருவை நன்கு பரிசீலித்த அரசு, அந்த பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, பொது நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் செய்யும் பணிகளை மேற்கொள்ள இதற்கென பிரத்யேகமாக இணைய தளத்தை உருவாக்கி நூல் கொள்முதல் செய்தல், நூல்கள் கொள்முதல் செய்ய அமைப்படும் வல்லுநர் குழுவை அரசின் ஒப்புதல் பெற்று பொதுநூலகத்துறை நியமித்துக் கொள்ளுதல், துணைக்குழுக்களை அமைத்தல், மேற்காணும் பணிகளை செய்ய அனுமதித்து இணையதளம் வழியாக பொதுநூலகங்களுக்கு நூல் கொள்முதல் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.