Saturday, July 27, 2024
Home » பொய் எடுபடாது

பொய் எடுபடாது

by MuthuKumar

தமிழ்நாட்டு மக்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் நிதி வழங்கப்படுவதாக சமீபத்தில் கூறிச் சென்றிருக்கிறார் மோடி. இது அப்பட்டமான பொய் என பதிலடி கொடுத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. இந்த பேரிடரில் இருந்து மீள்வதற்குள் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை பெருமழை புரட்டிப் போட்டது. 8 மாவட்ட மக்களும் மீளாத் துயரில் ஆழ்ந்தனர்.

வீடுகளை, உடைமைகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். வெள்ளத்தில் தத்தளித்த மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த அமைச்சர்களும் கிராமம், கிராமமாக சென்று நிவாரண உதவிகள் வழங்கினர். வெள்ளத்தால் பாதிக்கப்படாத மாவட்டங்களில் இருந்து 8 மாவட்டங்களுக்கும் நிவாரணப் பொருட்கள் தேடி வந்தன. தலைமைச் செயலாளர், அரசுத் துறை செயலாளர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் முன்னின்று வெள்ள நிவாரணப் பணிகள், மீட்புப் பணிகளை கவனித்தனர். வீடுகள், உடைமைகள் மட்டுமல்லாது அரசின் பொது சொத்துக்களான பாலங்கள், சாலைகள், குடிநீர் திட்டக் குழாய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் பிற மாவட்டங்களில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் அமைச்சர்கள், அதிகாரிகள் களத்தில் நின்று பணியாற்றி இரண்டு நாட்களில் தற்காலிக பணிகளை முடித்து படிப்படியாக போக்குவரத்து தொடங்கப்பட்டது. வெள்ள மீட்பு பணிகள் அனைத்தையும் துரிதமாக மேற்கொண்டது தமிழ்நாடு அரசின் இயந்திரம். இத்தனைக்கும் ஒரு நயா பைசா கூட ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசு வழங்கவில்லை. வெள்ள சேத மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு ₹37 ஆயிரம் கோடி நிவாரணம் கோரியது. முதல்வரே நேரில் சென்று பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டிற்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கோரினார்.

ஆனால் ஒன்றிய அரசின் அமைச்சர்கள் வந்தார்கள், ஒன்றியக் குழு வந்தது. நிவாரணம் மட்டும் ஒரு பைசா கூட இதுவரை வரவில்லை. பிரதமர் மோடி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வந்தபோது கூட எதிர்ப்பு தெரிவித்து, வெள்ள நிவாரணத்திற்கு ஒரு பைசா கூட தராததை கண்டித்து கறுப்புக் கொடி போராட்டமும் நடந்தது. ஆனால் ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகி விடும் என்ற நம்பிக்கையில், பிரதமர் மோடி மக்களுக்கு ஒன்றிய அரசு சார்பில் நேரடியாக நிதி வழங்கப்படுகிறது என்று சமீபத்தில் சொல்லியுள்ளார். நிதி வழங்கப்படுகிறது என்றால் அதற்கான ஆதாரம் எங்கே? வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்ற ரீதியில் நீங்கள் நலமா? என்ற திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு ரூபாயையாவது ஒதுக்கி தமிழ்நாட்டு மக்களுக்கு உதவி செய்தாரா? பிரதமர், இப்படியா பொய்களை சொல்வது. அவரது பொய் தமிழகத்தில் எடுபடாது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மாநில அரசுக்கு தராமல் பிரதமர் மக்களுக்கு நேரடியாக நிதி கொடுத்தார் என்றால் எந்த மக்களுக்கு கொடுத்தார்…. என்பதையாவது சொல்லி இருந்தால் அவர்களுக்கு உண்மையில் கிடைத்ததா என்று கேட்கலாம் என முதல்வர் கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து சொல்லும் பிரதமர் மோடி, முதல்வரின் நியாயமான கேள்விக்கு பதில் சொல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

You may also like

Leave a Comment

13 + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi