சென்னை: சென்னை எத்திராஜ் கல்லூரி பவளவிழாவை முன்னிட்டு ‘நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு’ குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில், எத்திராஜ் கல்லூரி முன்னாள் மாணவியும், பரதநாட்டிய கலைஞருமான பத்மா சுப்பிரமணியனுக்கு ‘சிறப்புமிக்க முன்னாள் மாணவர்’ விருதை தமிழக பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, மருத்துவர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் வழங்கினர்.
பின்னர் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி பேசியதாவது:
நாட்டில் அதிக பெண் தொழிலாளர்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இது தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நமது மாநிலம் 2வது இடத்திற்கு முன்னேற முக்கிய காரணம். அனைவரையும் வழி நடத்தும் திறமை பெண்களுக்கு இயல்பாகவே உள்ளது. தாய்மார்கள் தான் குழந்தைகளுக்கு கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கற்றுக்கொடுத்து மரபுகளை அழியாமல் பாதுக்காக்கிறார்கள். பெண்களை மதிக்க அனைவருக்கும் வீடுகளில் இருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.