புதுவை நாடாளுமன்ற தேர்தலில் பாஜ போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. வேட்பாளர் பட்டியலில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட 6 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் கடைசியாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த சூழலில் கஞ்சா போதையில் சிலர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சிறுமியின் கொலையால் அம்மாநில மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். புதுச்சேரி நகரம் முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமி கொலையை கண்டித்தும், போதை பொருட்களை தடுக்காத என்ஆர் காங்கிரஸ்- பாஜ கூட்டணி அரசை எதிராக எதிர்க்கட்சிகள் பந்த் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
அதேபோல் சிறுமிக்கு அஞ்சலி செலுத்த சென்ற ஆளுநர் தமிழிசைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் ஆளுங்கட்சி தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த விவகாரங்களால் பாஜ, என்ஆர் காங்கிரசார் கலக்கத்தில் உள்ளனர். சிறுமி பாலியல் கொலை விவகாரம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால், பாஜ வேட்பாளர் தொடர்பான இறுதிகட்ட கள சர்வேயிலும் அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் சிறுமி விவகாரத்தில் அரசு தரப்பில் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுத்த பிறகே, மக்களின் மனநிலை அறிந்து வேட்பாளரை அறிவிக்க பாஜ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.