தாம்பரம்: தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியை சேர்ந்த சத்யா, கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி இரவு அதே பகுதியில் மொபட்டில் சென்றபோது, வேன் மோதி காயமடைந்தார். அப்போது, வேன் ஓட்டுநர் செந்தில்குமார், மருத்துவ செலவை தான் ஏற்றுக்கொள்வதாக கூறி, அவரது செல்போன் எண்னை கொடுத்து தொடர்பு கொள்ளும்படி கூறியுள்ளார். அதன்படி சத்யா தொடர்பு கொண்டபோது, செந்தில்குமார் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், வாட்ஸ்அப் மூலம் ஆபாச படம் அனுப்பியுள்ளார்.
மேலும் பல்வேறு நபர்கள் சத்யா மற்றும் அவரது சகோதரிக்கு செல்போனில் தொடர்புகொண்டு தொடர்ந்து ஆபாசமாக பேசியுள்ளனர். மேலும், முகநூல் மூலம் ஆபாச பட குழுவில் இணைத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தாம்பரம் மாநகர சைபர் கிரைம் பிரிவில் சத்யா புகார் அளித்தார். அதன்பேரில், ஆய்வாளர்கள் சசிக்குமார், சாலினி ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று செந்தில்குமாரை கைது செய்தனர்.