சென்னை: சீனாவின் ஹாங்சூவில் கடந்த 22.10.2023 முதல் 28.10.2023 வரை நடந்த ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 7 வீரர் – வீராங்கனைகள் 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றனர். பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.3 கோடியே 80 லட்சம் காசோலைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார். மேலும், ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டை சேர்ந்த 11 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ‘தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை’ சார்பில் தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் 22 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, முதன்மை நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் பொது மேலாளர் மெர்ஸி ரெஜினா ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, சீனாவில் இருந்து திரும்பிய வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.