புதுக்கோட்டை: ‘புழல் சிறையில் செந்தில்பாலாஜிக்கு எந்தவொரு சிறப்பு வசதியும் வழங்கப்படவில்லை’ என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எந்தவொரு சிறப்பு வசதியும் வழங்கப்படவில்லை. முதல் வகுப்பு சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுமே வழங்கப்படுகிறது. செந்தில் பாலாஜியின் வழக்கு உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அவருக்கு இடையூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார்கள். தமிழக விவசாயிகளுக்கு முதல்வர் துரோகம் செய்ய மாட்டார். மேகதாது அணை விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுப்பார். விலைவாசி உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தவறு செய்தவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.