ஆவடி: பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே 1 டன் ரேஷன் அரிசியை கடத்திய வாலிபரை குடிமைப் பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்து இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்தனர். சென்னை பெருநகர பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் பதுக்கலை தடுக்க அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, குடிமைப் பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் கே.ஜோசிநிர்மல்குமார், உத்தரவின் பேரில், குடிமைப் பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை சென்னை மண்டலம் காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மேற்பார்வையில், சென்னை சரக காவல் துணை கண்காணிப்பாளர் எம்.சம்பத், அறிவுறுத்தலின் படி, சென்னை மண்டலம் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் வி.ஹேமலதா, தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் 25ம் தேதி பட்டாபிராம் ரயில் நிலையம் அருகில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் அவ்வழியே வந்தவரை நேற்றுமுன்தினம் சோதனை செய்தனர். அவர் ரேஷன் அரிசியை கடத்திக்கொண்டு செல்வது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் திருநின்றவூர் ஈபி ஆபீஸ் பின்புறம் வசித்து வரும் விஸ்வநாதன்(21) என தெரியவந்தது.
அவர் ரேஷன் அரிசியை திருநின்றவூர் மற்றும் பட்டாபிராம் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி பைக் மூலம் பட்டாபிராம் மேம்பால பணி வேலை செய்யும் வட இந்திய தொழிலார்களுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.
விஸ்வநாதனை கைது செய்த போலீசார், குடோனில் வைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகள் என மொத்தம் சுமார் 1050 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர், விஸ்வநாதனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.