ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அலங்கார வீரிய ரக வாழை இரண்டாம் சீசனுக்காக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தற்போது 2ம் சீசனுக்காக பூங்கா தயார் செய்யப்பட்டு வருகிறது. விதைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ள நிலையில், தாவரவியல் பூங்கா நர்சரியில் அலங்கார வீரிய ரக வாழை நடவு செய்யப்பட்டுள்ளது. மூசா ஆர்னேட்டா, மூசா ரூப்ரா, மூசா வெலுட்டினா மற்றும் மூசா அக்குமினேட்டா ஜேப்ரினா வகைகளை கொண்டு இனக்கலப்பு உருவாக்கப்பட்டது. இந்த வீரிய ரக அலங்கார வாழை. இந்த அலங்கார வாழையில் பூக்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனை அலங்கார பூச்செண்டுகள் தயாரிக்கவும், மலர் அலங்காரம் செய்யவும் பயன்படுத்த முடியும்.
திருச்சியில் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்ட இந்த கலப்பின வாழை தற்போது ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள நர்சரியில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவைகள் 2ம் சீசனின் போது தாவரவியல் பூங்கா மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படவுள்ளன. தற்போது இந்த வாழையில் பூக்கள் தண்டு பகுதியில் இருந்து வளர துவங்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.