மஞ்சூர்: மஞ்சூர் கோவை சாலையில் குட்டிகளுடன் நடமாடும் காட்டு யானைகள் அவ்வழியாக செல்லும் அரசு பஸ்கள், வாகனங்களை வழி மறிப்பது வாடிக்கையாக உள்ளது. இதனால் யானைகளை கண்காணிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் நீர் மின் நிலையம் மற்றும் குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றது. இதனால் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கெத்தை பகுதியில் யானைகளின் நடமாட்டம் இல்லாததால் இவ்வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சென்று வந்தது.
இந்நிலையில் காட்டு யானைகள் மீண்டும் கெத்தை பகுதிக்கு திரும்பியுள்ளது. கடந்த சில தினங்களாக 3 குட்டிகளுடன் 5காட்டு யானைகள் மந்து, கெத்தை, பெரும்பள்ளம் பகுதிகளில் நடமாடி வருகிறது. பெரும்பாலும் சாலைகளிலேயே யானைகள் நடமாடுவதால் அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் யானைகளின் வழிமறிப்பில் சிக்கி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குட்டிகளுடன் நடு ரோட்டில் யானைகள் நடமாடுவதால் கார், வேன், இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் அச்சமடைந்து நீண்ட தொலைவிலேயே தங்களது வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர்.
அதே சமயம் அரசு பஸ்கள் போன்ற கன ரக வாகனங்களை கண்டவுடன் காட்டு யானைகள் வழிவிடுவதைபோல் சாலையோரம் ஒதுங்கி விடுகிறது. இதனால் கார், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் யானைகளை கண்டவுடன் அரசு பஸ்கள் வரும் வரை தங்களது வாகனங்களை நிறுத்தி பஸ் வந்தவுடன் அதை பின் தொடர்ந்து செல்கின்றனர். பல சமயங்களில் அரசு பஸ்களையும் காட்டு யானைகள் நீண்ட நேரம் வழிமறிப்பதும் உண்டு. கடந்த 2 தினங்களுக்கு முன் ஊட்டியில் இருந்து மஞ்சூர் வழியாக இரவு கெத்தைக்கு சென்ற அரசு பேருந்தை சுமார் 4 மணி நேரம் காட்டு யானைகள் சிறை பிடித்தபடி வழி மறித்தது. இதனால் 9 மணிக்கு கெத்தை சென்றடைய வேண்டிய அரசு பஸ் நள்ளிரவு 1 மணியவில் கெத்தையை சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல மறுநாள் காலை மற்றும் மாலை, இரவு நேரங்களிலும் அரசு பஸ்கள், தனியார் வாகனங்களை யானைகள் வழி மறித்துள்ளது. மஞ்சூரில் இருந்து கெத்தை, முள்ளி, வெள்ளியங்காடு வழியாக கோவைக்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காட்டு யானைகள் வாகனங்களை வழிமறிப்பது தொடர்கதையாக உள்ளது. இதனால் பயணிகள் மத்தியில் கடும் பீதி நிலவுவுகிறது. அவசர, அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று பணிகளை முடித்து மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்படுகிறது.
மேலும் கார், வேன், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் காட்டு யானைகளை கண்டவுடன் தங்களது வாகனங்களை நிறுத்தி செல்போன்களில் செல்பி எடுக்க முற்பட்டு, கத்தி கூச்சலிடுவதால் யானைகள் மிரண்டு அதனால் பயணிகளுக்கு அபாயம் ஏற்படும் சூழலும் உள்ளது. எனவே மஞ்சூர்-கோவை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க வனத்துறையினர் இப்பகுதியில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும், சாலைக்கு வரும் யானைகளை உடனுக்குடன் வனப்பகுதிக்குள் விரட்ட உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் பயணிகள், வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.