கொல்கத்தா: சந்தேஷ்காலியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்குவங்கத்தில் கொரோனா காலகட்டத்தில் ரேஷன் பொருள் விநியோகத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் அப்போதைய உணவுத்துறை அமைச்சராக இருந்த ஜோதிப்ரியோ மல்லிக் கடந்த 2022ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக சோதனை நடத்த சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திரிணாமுல் பிரமுகர் ஷேக் ஷாஜகான் ஆதரவாளர்கள் பயங்கர தாக்குதல் நடத்தியதில் அதிகாரிகள் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில் ஷேக் ஷாஜகான் கடந்த பிப்ரவரி 29ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்குதல் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும் கைது செய்யப்பட்ட ஷேக் ஷாஜகானையும் சிபிஐயிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே ஷேக் ஷாஜகான் தொடர்புடைய ரூ.12.80 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.