மாலி: மாலத்தீவில் மே 10ம் தேதிக்கு பின் இந்திய வீரர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அந்நாட்டின் அதிபர் முகமது முய்சு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சீனாவின் ஆதரவாளராக கருதப்படும் முகமது முய்சு அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து இந்தியா எதிர்ப்பு அரசியல் கொள்கையை மேற்கொண்டு வருகின்றார்.
மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றுவதில் அந்நாட்டு அதிபர் தீவிரம் காட்டி வருகின்றார். 3 விமான தளங்களில் இந்திய ராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒரு விமான தளத்தில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்கள் மார்ச் 10ம் தேதிக்குள்ளும், மீதமுள்ளவர்கள் மே 10ம் தேதிக்குள் வெளியேற்றுவதற்கும் இருநாடுகளும் ஒப்புக்கொண்டன.
இந்நிலையில் பா அடோல் தீவின் தலைநரான எய்தாபுசியில் நேற்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிபர் முய்சு பேசுகையில்,‘‘மே 10ம் தேதிக்கு பின்னர் இந்திய ராணுவ வீரர்கள் யாரும் மாலத்தீவில் இருக்கமாட்டார்கள். ராணுவ சீருடையிலும் இல்லை, சிவில் உடையிலும் இல்லை. இந்திய ராணுவம் எந்த வகையான ஆடையிலும் இந்த நாட்டில் வசிப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாது” என்று தெரிவித்துள்ளார்.