கூடுவாஞ்சேரி, : ஊரப்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். ஊரப்பாக்கம் அடுத்த காரணைபுதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட அஷ்டலட்சுமி நகரில் வசித்து வருபவர் பிரபாகரன் (40). இவர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் காரணைபுதுச்சேரியில் புதிதாக வீடு கட்டி, சமீபத்தில் கிரகப் பிரவேசம் செய்துவிட்டு, ஊருக்குச் சென்று விட்டார்.
இந்நிலையில், புதிய வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து, உள்ளே இருந்த பூஜைப் பொருட்கள் மற்றும் 1 கிலோவுக்கும் அதிகமான வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றனர். இதேபோல், ஊரப்பாக்கம் அருகில் எஸ்.ஐ. பிரபாகரன் வீட்டின் அருகிலேயே குமரேசன் (48) என்பவரின் வீடு உள்ளது.
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் குமரேசன், மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு, குடும்பத்துடன் கும்பகோணத்திற்குச் சென்றுள்ளார். அந்த வீடும் பூட்டி கிடந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே சென்று, வீட்டில் வைத்திருந்த வெள்ளி பொருட்கள், பித்தளை குத்துவிளக்குகள் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து, இரு வீட்டினரும் கூடுவாஞ்சேரி போலீசாரிடம் புகாரின் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.