காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதிகளில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது படத்திற்கு அதிமுகவினர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம்,
மாநகராட்சி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஓரிக்கை, பூக்கடை சத்திரம், காந்தி சாலை பெரியார் தூண், மாகறல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல்வேறு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில், அதிமுக முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பல்வேறு இடங்களிலும் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஏழை எளிய மக்களுக்கு காலை அறுசுவை சிற்றுண்டிகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் அதிமுக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சோமசுந்தரம், பகுதிச் செயலாளர்கள் பாலாஜி, கோல்ட் ரவி, ஜெயராஜ், ஒன்றிய செயலாளர்கள் தும்பவம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜீ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக (ஓபிஎஸ் அணி) சார்பில், காஞ்சிபுரம் காந்தி ரோடு தேரடியில் ஜெயலலிதாவின் படத்திற்கு மாவட்டச் செயலாளர் முத்தியால்பேட்டை ரஞ்சித்குமார் தலைமையில், ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கற்பூர தீபாராதனை காண்பித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன்பிறகு ஏராளமான பொதுமக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் இனிப்பு, அன்னதானம் வழங்கி, ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் அவைத்தலைவர் ரங்கநாதன், பொருளாளர் வஜ்ரவேலு, துணை செயலாளர் சகுந்தலா கோபால், துணை செயலாளர் மோமமங்கலம் ரமேஷ், மாநகர செயலாளர் வேலு, பகுதிச் செயலாளர் பழனி, கோகுல், நிர்வாகிகள் எத்யேந்திரன், பூக்கடை ஜகா, சக்தி சேவல் கண்ணிவேல், மதன், தினேஷ், ஸ்ரீபெரும்புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் வல்லம் பழனி, மாவட்ட ஒன்றிய மாநகர பேரூர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.