மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே பென்சில் மரத்தோப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் ஊராட்சிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையையொட்டி இளந்தோப்பு பகுதியில் ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான பென்சில் மரத்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் நேற்று திடீரென பென்சில் மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து, தகவலறிந்த பட்டிப்புலம் ஊராட்சி தலைவர் வரலட்சுமி லட்சுமிகாந்தன் உடனடியாக மாமல்லபுரம் தீயணைப்பு துறைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்.
ஆனால், தீயணைப்பு வாகனம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நெம்மேலி கடல்நீரை சுத்திகரிக்கும் 2வது ஆலை திறப்பு நிகழ்ச்சிகாக மேடைக்கு அருகே பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருந்ததால், அங்கு சாலையையொட்டி நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு தீயணைப்பு வாகனத்தை எடுத்துக்கொண்டு மாமல்லபுரம் மற்றும் மதுராந்தகம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இதனால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. மர்ம நபர்கள் யாரேனும் மரங்களுக்கு தீ வைத்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. பென்சில் மரத்தோப்பு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.