கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வண்டலூர் அடுத்த ரத்தினமங்கலம், வண்டலூர், ஓட்டேரி விரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் வடக்கு ஒன்றியச் செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான கஜா என்ற கஜேந்திரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணைச் செயலாளர் வனஜா துளசிதாஸ், மாவட்ட விவசாய அணி தலைவர் கண்ணப்பன், அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் ரபீக், அம்மா பேரவை ஒன்றிய இணை செயலாளர் வேதகிரி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் கனி என்ற கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்து பகுதிகளிலும் அதிமுக கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து கேக் வெட்டி இனிப்புகளை வழங்கினர்.
பின்னர் தூய்மை பணியாளர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வேட்டி சேலை மற்றும் பிரியாணி வழங்கினர். இதேபோல் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் அரசு வழக்கறிஞர் கேசவலு, அதிமுக நகர செயலாளர் சீனிவாசன், 4-வது வார்டு கவுன்சிலர் தங்கராசு, 25-வது வார்டு கவுன்சிலர் எஸ்.டி.பிரசாத் ஆகியோர் தலைமை தாங்கினர். ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.