ஆண்டிபட்டி: தேனி, அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோயில் சாலையில் வசித்து வருபவர் மெகத் ஷாஜகான். திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளராக பணி புரிந்து வரும் இவர் மீது புகார்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.
அதனடிப்படையில் தேனி அல்லிநகரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று காலை 6 மணியளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். தேனி லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக மாலை வரை சோதனை நடந்தது. மேலும், மெகத் ஷாஜகான் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.