தர்மபுரி: தர்மபுரி அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், ஓய்வு பெற்ற எஸ்ஐ. இவரது மனைவி கௌரி, கிருஷ்ணகிரி அணையில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் தினேஷ்குமார்(33). சிவில் இன்ஜினியர். நீண்ட தூரம் பைக் மற்றும் கார் ஓட்டுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த சில மாதங்களாக தென்ஆப்பிரிக்காவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து கொண்டிருந்தார். பணி காலம் முடிந்து சொந்த ஊருக்கு திரும்பும் நிலையில், தனது நீண்டகால கனவான தொலை தூரம் கார் ஓட்டும் உலக சாதனையை, தென்ஆப்பிரிக்காவில் நிகழ்த்த திட்டமிட்டார். 24 மணி நேரத்தில் அதிக தூரம் காரை ஓட்டி சாதனை புரிவது தான் அவரது திட்டமாக இருந்தது. இந்த சாதனையை இந்தியாவிலேயே இதுவரை இரண்டு பேர் மட்டுமே செய்துள்ளனர். இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் உள்ள முக்கிய சர்வதேச சுற்றுலா தலங்களை, 23 மணி நேரத்தில் தொடர்ச்சியாக 2,154 கி,மீ தூரத்தை காரில் கடந்து, சாதனை படைத்துள்ளார். இதற்காக 360 குதிரை சக்தி கொண்ட 6000 சிசி இன்ஜின் பவர் கொண்ட காரில் பயணித்து, இந்த சாதனையை முடித்துள்ளார்.
இது குறித்து தினேஷ்குமார் கூறுகையில், எனது சாதனைக்கு ஏற்ற களம் தென் ஆப்பிரிக்காதான் என்பதை முடிவு செய்தேன். அங்கு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த விரிவான சாலைகள் இருந்ததே அதற்கு காரணம். இந்த சாதனைக்காகவே, தென்ஆப்ரிக்கா நாட்டிற்கு வேலை தேடி சென்றேன். அங்கு எனது பணிக்காலம் முடிந்த நிலையில், சொந்த ஊருக்கு திரும்பும் முன்னர், பிரபலமான அகனீஸ் என்ற இடத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு, சாதனையை செய்ய துவங்கினேன். கார்டன் உட் ஆப் தென்ஆப்பிரிக்கா என அழைக்கப்படும் இடம் வரை, 23 மணி நேரத்தில் 2,154 கிலோமீட்டர் தூரத்தை, தனியாக காரை ஓட்டி சாதனை செய்தேன். ஏற்கனவே சாதனை செய்தவர்களை விட, 300 கிலோ மீட்டர் தூரம் அதிகமாக பயணித்துள்ளேன். எனது சாதனையை இந்திய புக் ஆப் ரிக்கார்ட்ஸ் அமைப்பு அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது என்றார்.