வேலூர்: பல பெண்களுடன் எடுத்த ஆபாச வீடியோவை பார்க்கும்படி சித்ரவதை செய்வதோடு, 9 மாத குழந்தையை கொல்லும்படியும், 2 மாத கருவை கலைக்கும்படியும் மிரட்டுவதாக போலீஸ் கணவன் மீது வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மனைவி புகார் கொடுத்தார். வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஏடிஎஸ்பிக்கள் பாஸ்கரன், கோட்டீஸ்வரன், கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். இதில் கணியம்பாடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கும் ஆயுதப்படை போலீஸ்காரரான பிரகாஷ் என்பவருக்கும் பெற்றோர் ஏற்பாட்டில் 2 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.
தற்போது 9 மாத கைக்குழந்தை உள்ளது. மேலும் 2 மாத கர்ப்பமாக உள்ளேன். எனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. அவர்களுடன் ஆபாசமாக இருந்ததை அவரே செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருக்கிறார். அவற்றை பார்க்கும்படி கூறி என்னை சித்ரவதை செய்கிறார். மேலும் எனது பெற்றோரிடம் இருந்து நகை, பணம், சொத்து என வரதட்சணை வாங்கி வரும்படி கூறி அடித்து உதைத்து கொடுமைப்படுத்துகிறார். எனது குழந்தையை கொன்று விடும்படியும், 2 மாத கருவை கலைக்கும்படியும் மிரட்டுகிறார். இவற்றை ஏற்காததால் என்னை வீட்டை விட்டு அடித்து விரட்டிவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.