திருச்சி: திருச்சியில் முதலமைச்சரிடம் உதவி கோரிய சிறுமிக்கு கல்வி செலவுடன் அவருடைய குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சரை பார்த்து கத்தியபடி கோரிக்கை வாய்த்த சிறுமி ஒருவர் தன்னுடைய அப்பா இறந்துவிட்டதால் பள்ளிகூடம் செல்ல சிரமப்படுவதாகவும் உதவி செய்யுமாறும் கேட்டார்.
சிறுமியின் தாயாரிடம் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார். கோவையை சேர்ந்த கவிதா என்ற பெண்ணின் கணவனான முத்துக்குமார் கடந்த மார்ச்சில் அவருடைய சொந்த ஊரான திருச்சி மாவட்டம் கன்னூத்து கிராமத்தில் இறந்துவிட்டார்.
கணவரின் சொத்துக்கள் கூட்டுரிமையாக இருப்பதால் அதனை விற்பனை செய்ய மாமியார் இடையூறு செய்வதாகவும் இரண்டு குழந்தைகளின் கல்வி கட்டணத்தை செலுத்தமுடியாத நிலையில் இருப்பதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அந்த பெண்ணுக்கு கோவையில் அரசு சார்பில் வீடு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் திருச்சி மாவட்ட ஆட்சியர் 2 சிறுவர்களின் கல்வி கட்டணத்தை தானே ஏற்று கொள்வதாக தெரிவித்தார். மேலும் கவிதாவின் கணவர் சொத்துக்களை மீட்க இலவச சட்ட உதவி மையம் மூலமாக உதவி செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.